பேயும் பேய்சார்ந்த இடமும் தான் ‘ஆறாம் திணை’!

MRKVS சினி மீடியா சார்பாக ஆர். முத்துக்கிருஷ்ணன் மற்றும் எம். வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரங்களில் மொட்ட ராஜேந்திரன், ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர்.

மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என இலக்கியங்களில் ஐந்திணைகள் பற்றி சொல்லப்படுவது உண்டு. ஆனால் ‘பேயும் பேய்சார்ந்த இடமும்’ ஆக இந்த ‘ஆறாம் திணை’ உருவாகியுள்ளது. பொதுவாக பேய்ப்படங்களில் முக்கியமான அம்சமே பேய்களுக்கென இடம்பெறும் பிளாஸ்பேக் தான். ஆனால் அந்த மரபை உடைத்து, ஒவ்வொரு காரியங்களுக்கான காரணங்களையும் படம் பார்க்கும் பார்வையாளர்கள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளும் விதமாக புதிய பாணியில் திரைக்கதை வடிவமைக்கப்படுள்ளது. இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

எப்போதும் பாசிடிவான எண்ணங்கள் தான் நல்ல விளைவுகளை கொடுக்கும் என்கிற கருத்தை முன்னிறுத்தி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பேயை தாறுமாறாக விரட்டி விரட்டி காதலிக்கும் மொட்ட ராஜேந்திரனின் கதாபாத்திரம் புதியதாகவும் கலகலப்புக்கு உத்தரவாதம் தருவதாகவும் இருக்கும் அதுமட்டுமல்ல நடிகர் ரவிமரியாவுக்கும் இது பேர்சொல்லும் படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் அருண்.சி. மொட்ட ராஜேந்திரனுடன் விஜய் டிவி கலக்கப்போவது யாரு டைட்டில் வின்னர் குரேஷியும் காமெடியில் கலக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் கே.சோழன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு – திருமலை.

கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதியில் கடும் மழையில் கூட இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நாளை டிச-27ஆம் தேதி நடைபெற இருக்கிறது.