தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ‘ரிச்சி’ ஒரு புது அனுபவமாக இருக்கும் – நிவின் பாலி

சினிமாவுக்கு மொழி கிடையாது. அதே போல் தான் ஒரு நல்ல நடிகருக்கும். ஒரு அபிமான நடிகர், ஸ்டாராகவும் ஜொலிக்கும் பொழுது அவர் எல்லைகள் தாண்டி, மொழி வித்யாசங்கள் தாண்டி ரசித்து கொண்டாடப்படுவார். அது போன்ற ஒரு நடிகர் தான் நிவின் பாலி. அவரது முதல் நேரடி படமான ‘ரிச்சி’ வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தை கவுதம் ராமசந்திரன் இயக்கியுள்ளார்.

‘ரிச்சி’ குறித்து நிவின் பாலி பேசுகையில், ” தமிழ் சினிமாவின் ரசிகன் நான். எனது இந்த முதல் நேரடி தமிழ் படத்தில் நடித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ‘ரிச்சி’ ஒரு புது அனுபவமாக இருக்கும். கதையின் பின்னணியும் அணுகுமுறையும் அப்படி. இப்படத்தில் எனது கதாபாத்திரம் மிக சுவாரஸ்யமான மற்றும் சவாலான ஒன்று. இப்படத்திற்கு சொந்த குரலில் டப் செய்துள்ளேன். இதற்காக மிகவும் மெனக்கெட்டேன். ஏனென்றால் ஒரு தமிழ் வட்டார பாஷயை பேசுவது சுலபமல்ல. இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் இக்கதையை சிறப்பாக கையாண்டுள்ளார். எல்லா சகநடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்திற்காக பெருமளவு உழைத்துள்ளனர். இந்த எனது முதல் நேரடி தமிழ் படத்தின் ரிலீஸை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். நல்ல, சுவாரஸ்யமான சினிமாவை என்றுமே கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்கள் ‘ரிச்சி’ படத்தை நிச்சயம் ரசித்து பாராட்டுவார்கள் என நம்புகிறேன் ”

‘ரிச்சி ‘ படத்தை ‘Cast N Crew’ நிறுவனம் சார்பில் ஆனந்த் குமார் மற்றும் வினோத் ஷோர்னுர் தயாரித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையில், பாண்டி குமார் ஒளிப்பதிவில் ‘ரிச்சி’ உருவாகியுள்ளது. இப்படத்தை ‘Trident Arts’ ரவீந்திரன் தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யவுள்ளார். இப்படத்தில் நிவினுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார் . ‘நட்டி’ நட்ராஜ் மற்றொரு கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் பரத் மற்றும் லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.