வயோதிகம் பிழையில்லை முக்தா சீனிவாசன்

முக்தா பிலிம்ஸ் என்ற நிறுவனமும் முக்தா சீனிவாசன் என்கிற பெயரும் சினிமா பொற்காலமாக திகழ்ந்த கால கட்டத்தில் கோலோச்சிய பெயர்கள்..
தரமான படங்களை தயாரித்து வழங்கிய இவர்கள் இன்று ஹைடெக் சினிமா சுனாமியால் காணாமல் போய் விட்டார்கள்..
இவர்களின் ஒவ்வொரு படைப்புமே இன்று வரை நினைவில் நிற்பவை..
சினிமாத்துறையிலிருந்து சற்று ஒதுங்கி இருந்தாலும் முக்தா சீனிவாசன் எழுத்து துறையை ஒதுக்கி விட வில்லை..
இது வரை 250 புத்தகங்கள எழுதி இருக்கிறார். சுமார் 1000 சிறுகதைகள் கட்டுரைகளை எழுதி இருக்கிறார். திரைத்துறைக்குள் காலடி வைத்து 70 ஆண்டுகளை கடந்து விட்டேன். 50 படங்களுக்கு மேல் இயக்கி தயாரித்து விட்டேன். அதில் கிடைத்த அதே அளவு மன நிறைவை எழுத்தின் மூலம் பெற்றிருக்கிறேன்.. நாம் கற்றதை மற்றவர்களும் பயன் பெற வேண்டும் என்பதால் வீட்டுக்குள்ளேயே ஒரு நூலகத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன்.

யார் வேண்டுமானாலும் எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் அதுவும் இலவசமாக. திருப்பி தந்து விட வேண்டும் என்ற அன்பு கட்டளையுடன். இப்போது எனக்கு மன நிறைவை தந்திருப்பது சமீபத்தில் நான் எழுதிய புத்தகம் தான்..
நமக்காக வேற்று மொழியான சமஸ்க்ருதத்தில் இயற்றப் பட்ட ரிக் வேதம் யஜுர் வேதம் சாம வேதம் அதர்வன வேதம் ஆகிய நான் கு வேதங்களையும் எல்லோருக்கும் புரிகிற மாதிரி சுத்தமான தமிழில் சதுர் வேதம் என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறேன்.. இன்றைய தலை முறையினர் இதையெல்லாம் ஈசியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

எழுத்தை நான் நேசிக்கிறேன்.
எழுதுவதை நான் நேசிக்கிறேன்.
வயோதிகம் என்பது பிழையில்லை.

என்பதை உணர்ந்ததால் எழுதுகிறேன் படிக்கிறேன் என்றார் முக்தா வி சீனிவாசன்.