இயக்குநர் கே.பாலசந்தருக்கு கவிஞர் வைரமுத்து சிலை அமைக்கிறார் கமல்ஹாசன், மணிரத்னம் பங்கேற்பு

நூறு படங்களுக்குமேல் இயக்கி தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர் இயக்குநர் கே.பாலசந்தர். கலையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்குமேல் இயங்கியவர்.
கமல் – ரஜினி – ஏ.ஆர்.ரகுமான் போன்ற பெரிய கலைஞர்களை அறிமுகப்படுத்தியவர்.
தொழில்ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் கே.பாலசந்தரும் கவிஞர் வைரமுத்துவும் நெருங்கிப் பழகியவர்கள். அந்த நட்பின் அடையாளமாக அவர் பிறந்த ஊரில் அவர் பிறந்த நாளான ஜூலை 9ஆம் தேதி அன்று பாலசந்தருக்குச் சிலை அமைக்கிறார் கவிஞர் வைரமுத்து.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை ஒட்டிய நல்லமாங்குடிதான் பாலசந்தர் பிறந்த ஊர். அவர் பிறந்த வீடு இப்போது ஒரு பள்ளிக்கூடமாக இருக்கிறது. அந்தப் பள்ளி வளாகத்திற்குள் சிலை நிறுவப்படுகிறது. வெண்கலத்தில் செய்யப்பட்ட பாலசந்தரின் மார்பளவுச் சிலையை அவரது மனைவி ராஜம் பாலசந்தர் திறந்துவைக்கிறார். நடிகர் கமல்ஹாசன் – இயக்குநர்கள் மணிரத்னம், வஸந்த் எஸ்.சாய் – தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் – கவிஞர் வைரமுத்து ஆகியோர் பாலசந்தருக்குப் புகழுரை வழங்குகிறார்கள்.
பாலசந்தர் குடும்பத்தார் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொள்கிறார்கள்.
சிலை திறப்புப் பற்றி கவிஞர் வைரமுத்து கூறியதாவது :
“திரையுலகில் என்னால் மறக்க முடியாத ஒரு பேராளுமை இயக்குநர் கே.பாலசந்தர். ஒரு மகனைப்போல என்னை அவர் நேசித்தார். ஒரு தந்தையைப்போல் அவரை நான் நேசித்தேன். அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில் ஒரு மடைமாற்றத்தை ஏற்படுத்தியவர் அவர்; சமூகத்தின் இருட்டின்மீது வெளிச்சம் பாய்ச்சி ஒரு கலாசார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்; தமிழ் சினிமாவிற்கு இந்திய முகம் கொடுத்தவர். அவர் படங்களைப் போலவே அவரும் மறக்கப்படக்கூடாதவர். அவர் படங்களில் வெற்றிப் படங்கள் தோல்விப் படங்கள் என்று தரம் பிரிக்க முடியாது. புரிந்துகொள்ளப்பட்டவை புரிந்துகொள்ளப்படாதவை என்று மட்டுமே இனம் பிரிக்கலாம்.
அவருக்குச் சிலை எடுப்பது என்பது அவருக்கு நான் செலுத்தும் நன்றிமட்டுமல்ல; முன்னோடிகளை மதிக்கும் ஒரு கலாசாரமாகும். இந்தப் பணியை என் வாழ்வின் கடமைகளுள் ஒன்று என்று கருதுகிறேன்” இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
வெற்றித்தமிழர் பேரவையைச் சார்ந்த தஞ்சை இரா.செழியன், ஆசிப் அலி, சுப்பிரமணிய சர்மா, தருமசரவணன், பன்னீர்செல்வம், மற்றும் நல்லமாங்குடி கமலக்கண்ணன், ரெங்கநாதன், கும்பகோணம் தி.வெ.ஷத்தீஷ், சிலைச்சிற்பு செந்தில் உள்ளிட்டோர் விழாக் குழுவாகச் செயல்படுகிறார்கள்.
ஜூலை 9 மாலை 5 மணிக்கு நல்லமாங்குடி குரு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வளாகத்தில் விழா நடக்கி