ஜோதிகா மேடம் சீரியசாக , ரசிச்சு , சிரிச்சு கேட்டு நடிக்க ஒப்புக்கொண்ட கதை தான் “ மகளிர் மட்டும் “ இயக்குநர் பிரம்மா

‘மகளிர் மட்டும்’ எமோஷனலான திரைப்படம். படத்தின் ஒவ்வொரு ஃபிரேம்மையும் நீங்க சிரிச்ச முகமாகவே பார்த்து என்ஜாய் பண்ணுவீங்க என்கிறார் இயக்குநர் பிரம்மா.
‘மகளிர் மட்டும்’ கதை ரெடியானதும் ஜோதிகாவுக்கு பொருத்தமான கதையா இருந்துச்சு. அவங்ககிட்ட கதை சொல்லும் போது, சில இடங்கள்ல சீரியஸா கேட்டாங்க. நிறைய இடங்கள்ல சிரிச்சாங்க. அப்பவே எனக்கு கான்பிடன்ட் வந்திடுச்சு. அடுத்து சூர்யா சார்கிட்ட கதையை சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. ‘2டி’லேயே பண்ணிடலாம்’னு உற்சாகப்படுத்தினார்.

ஜோதிகா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன்னு பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை. ‘மகளிர்மட்டும்’ டைட்டில் கிடைச்சா ரீச் அதிகமா இருக்கும்னு நினைச்சேன். சூர்யா சார் உடனே கமல் சார்கிட்ட பேசி, இந்த டைட்டிலை வாங்கிக் கொடுத்தார். இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. நாசர் சார், லிவிங்ஸ்டன், பாவல், கோகுல்நாத் தவிர நிறைய புதுமுகங்கள் இருக்காங்க.

முதல் படத்துல ரிகர்சல் சாத்தியமாச்சு. இந்தப் படத்துலேயே ஒரு மாசம் workshop வச்சிருந்தேன். இந்த மாதிரி பயிற்சிப் பட்டறை வைக்கறது அவங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கறதுக்கு இல்ல. இது ஆக்டிங் ப்ராக்டீஸ் கிடையாது. கேரக்டரோட ஆழத்தை உணர்ந்து உள்வாங்கிக்கிற முயற்சியாகத்தான் இந்த ஒர்க்‌ஷாப். ஜோதிகா, ஊர்வசி, சரண்யா எல்லாருமே பிஸியானவங்க. அதனால அவங்களத் தவிர மத்தவங்க பயிற்சி எடுத்தாங்க. ஊர்வசியும், நாசரும் ஏற்கனவே பழைய ‘மகளிர் மட்டும்’ல நடிச்சிருந்தவங்க. மறுபடியும் அதே டைட்டில்ல நடிச்சிருக்கறது சந்தோஷமா இருக்குதுனு சொன்னாங்க.

பானு ப்ரியா மேம்மை நடிக்க வைக்கலாம்னு தேடினா வெளிநாடு போயிருந்தாங்க. அவங்க வர்ற வரை காத்திருந்தோம். அதே மாதிரி ஊர்வசி மேம் ஒரு தகவல் களஞ்சியம். அவ்வளவு விஷயங்கள் தெரிஞ்சு வச்சிருக்காங்க. ஆக்ரா ரோட்டுல ஜோதிகா புல்லட் ஓட்டுற சீன்ல பைக்ல பின்னாடி உட்காரச் சொன்னதும் ஊர்வசி மேம் மிரண்டுட்டாங்க. ‘எனக்கும் பைக்குக்கும் ராசியே கிடையாது’னு தயங்கினாங்க. யாருக்கும் தெரியாமல் கேமரா வச்சு, லைவ் ஷூட் பண்ணினோம். செட்டுல சரண்யா மேம்ல இருந்து எல்லாருமே ஒண்ணு சேர்ந்தா பிக்னிக் மாதிரி பேசி, சிரிச்சு, சந்தோஷமாக இருந்தோம். படத்தோட பூஜை அன்னிக்கு சூர்யா சாரால் வர முடியல. முதல் நாள் ஷூட்டிங் அன்னிக்கு ‘அழகான படத்தை எடுத்துக் கொடுங்க. வாழ்த்துகள்’னு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதன்பிறகு நிறைய முறை ஸ்பாட்டுக்கு வருவார். ‘எந்த ஆர்ட்டிஸ்ட் தேவைனாலும் சொல்லுங்க’னு கேட்பார். ஒரே ஒரு படம் பண்ணின இயக்குநர்னு நினைக்காம எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.

என்னோட குறும்படங்கள்ல இருந்து கூடவே இருக்கும் எஸ்.மணிகண்டன், ‘குற்றம் கடிதலு’க்கு அடுத்து இதற்கும் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். இடையே தெலுங்கில் ரெண்டு படங்கள் அவர் பண்ணிட்டார். படத்துக்கு இசை ஜிப்ரான். ‘வாகை சூடவா’ல இருந்து அவரோட இசையை கவனிச்சிட்டிருக்கேன். இதுல அவர் நாலு பாடல்கள், ஒரு தீம் மியூசிக், ஒரு ஃபோக்னு வெரைட்டி கொடுத்திருக்கார்.

பிரபாவதி. ஆவணப்பட இயக்குநரா நடிச்சிருக்காங்க. வழக்கமான ஜோதிகா – ல இருந்து கொஞ்சம் மாறியிருக்கற ஜோதிகாவா இருக்கணும். ரெகுலர் ஆடியன்ஸ் விரும்பற ஜோதிகாவாகவும் தெரியணும்னு இந்த கேரக்டரை உருவாக்கினேன். புல்லட் தவிர, வேற ஒரு வாகனமும் அவங்க ட்ரைவ் பண்ணுவாங்க. நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டு வந்தாங்க.

அவங்க பஞ்சாபி பெண். ஆனா, தமிழை உணர்ந்து பேசி நடிக்கறாங்க. தங்லீஷ்லதான் ஸ்கிரிப்ட் கொடுத்திருந்தேன். டயலாக்கைக் கூட முதல்நாளே வாங்கிட்டுபோய் மறுநாள் வரும்போது மனப்பாடமா பேசினாங்க. ‘மாயாவி’ல சொந்தக்குரல்ல டப்பிங் பேசியிருப்பாங்க. அதுக்குப் பிறகு இதுலதான் அவங்களே டப்பிங் பேசியிருக்காங்க. காலையில ஆறு மணிக்கு ஷூட்டிங்னா ஷார்ப்பா அந்த டைமுக்கு செட்ல இருப்பாங்க. டெடிகேட்டட் ஆர்ட்டிஸ்ட்.