“என் திரையுலக கனவை பூர்த்தி செய்த தேவதை, சைத்தான்….” என்கிறார் அருந்ததி நாயர்

நடிப்பு தான் உலகம், நடிப்பு தான் வாழ்க்கை என்று ஒரு நடிப்பு வெறி கொண்ட சைத்தானாகவே மாறி இருக்கும் விஜய் ஆண்டனியோடு இணைந்து பணியாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு கடின உழைப்பும், முழு அர்ப்பணிப்பும் தேவை. அந்த குணங்களோடு சைத்தான் திரைப்படத்தில் களம் இறங்கி, தன்னுடைய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார், கேரளாவில் இருந்து உதயமாகி இருக்கும் கதாநாயகி அருந்ததி நாயர். விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து, சைக்கோலாஜிக்கல் – திரில்லர் பாணியில் அறிமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருக்கும் சைத்தான் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.

“மனித வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ‘சைத்தான்’ னை வரவேற்க ஒட்டுமொத்த தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களும் காத்து கொண்டிருக்கிறார்கள். என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிக பெரிய மைல் கல்லாக அமைந்திருக்கும் இந்த ‘சைத்தான்’ , எனக்கு தேவதை……” என்று மெல்லிய புன்னகையோடு துவங்குகிறார் வணிகவியல் பாடத்தில் பட்டம் பெற்று இருக்கும் அருந்ததி நாயர்

“என் மீது நம்பிக்கை வைத்து, என்னை சைத்தான் படத்திற்காக தேர்ந்தெடுத்த விஜய் ஆண்டனி சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். ‘ஐஸ்வர்யா’ என்னும் வலுவான கதாபாத்திரம் மூலம் என்னுடைய திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை பெற்று தந்திருக்கிறது சைத்தான் என்பதை நான் பெருமையாக சொல்லுவேன்….

பொதுவாகவே வளர்ந்து வரும் பிற மொழி பேசும் கதாநாயகிகளுக்கு, அவர்களின் சொந்த குரலில் டப்பிங் செய்வதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை…..ஆனால் விஜய் ஆண்டனி சார் என்னை என்னுடைய சொந்த குரலிலேயே சைத்தான் படத்தில் பேச செய்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது….. சைத்தான் பார்ப்பதற்கு சாதுவாகவும்,எளிமையாகவும் இருக்கலாம், ஆனால் வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அந்த ‘சைத்தான்’ னின் உண்மையான அவதாரத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள்….” என்று மிரட்டும் தோரணையில் கூறுகிறார் அருந்ததி நாயர்.