“திகில் என்பதை தாண்டி, ரசிகர்களுக்கு ஒரு சுவாரசிய விருந்தாக எங்களின் ‘ரம்’ திரைப்படம் இருக்கும்…” என்கிறார் சஞ்சிதா ஷெட்டி

‘தில்லாலங்கடி’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்து, விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’ திரைப்படம் மூலம்  தமிழ் திரையுலகில் ஆழமாக கால் பதித்த சஞ்சிதா ஷெட்டி, தற்போது விரைவில் வெளியாக இருக்கும் ‘ரம்’ திரைப்படத்திற்காக மிகுந்த உற்சாகத்துடன் காத்து கொண்டிருக்கிறார். ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா தயாரித்து, அறிமுக இயக்குநர் சாய் பரத் இயக்கி இருக்கும் ‘ரம்’ திரைப்படத்தில் ‘வி ஐ பி’ படப்புகழ்  ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் மற்றும் விவேக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிய கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்…. அந்த வகையில் நான் ‘ரம்’ திரைப்படத்தில்  நடித்திருக்கும் ‘ரியா’ கதாபாத்திரம், அனைவரின் பாராட்டுகளையும் பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறேன். விவேக் சார் போன்ற திரையுலகின்  மூத்த கலைஞரோடு பணியாற்றியது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. அவரிடம் இருந்து  நாங்கள் கற்று கொண்டது ஏராளம். ரம் திரைப்படத்தின் மூலம்  கதாநாயகனாக அறிமுக ஆகும் ஹ்ரிஷிகேஷ், தன்னுடைய கடின உழைப்பாலும், நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் குணத்தாலும், தன்னுடைய கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்துள்ளார்…
ரம் திரைப்படம் உட்பட இதுவரை நான் நடித்த ஒன்பது படங்களுமே, திறமையான உதவி இயக்குநர்களாலும்,  குறும்பட இயக்குநர்களாலும் உருவாக்கப்பட்டது  என்பதை நினைக்கும் போது, எனக்கு பெருமையாக இருக்கின்றது. திகில் என்பதை தாண்டி, ரசிகர்களுக்கு ஒரு சுவாரசிய விருந்தாக எங்களின் ரம் திரைப்படம் இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கிறோம்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ரம் படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி.