சேவாகின் பிறந்த நாளன்று படப்பிடிப்பை நிறைவு செய்தனர் ‘சென்னை 28 – II’ படக்குழுவினர்

தமிழக ரசிகர்கள் மத்தியில் தற்போது கிரிக்கெட் ஜுரம் வேகமாக பரவி கொண்டு வருகிறது….அதற்கு காரணம் சர்வேதச கிரிக்கெட் போட்டி கிடையாது, மாறாக சென்னை 28 அணியினர் விளையாட இருக்கும்  ‘கல்லி கிரிக்கெட்டின்’ இரண்டாம் ஆட்டம் தான்.  ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ சார்பில் வெங்கட் பிரபு தயாரித்து இயக்கி இருக்கும் சென்னை 28 இரண்டாம் பாகத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் தலைமையில் கோலாகலமாக மலேஷியாவில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது தங்களின் படப்பிடிப்பை மிகுந்த உற்சாகத்துடனும், ஆற்றலுடனும்  ‘சென்னை 28 – II’ படக்குழுவினர்  நிறைவு செய்திருக்கின்றனர்…பிரபல கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாகின் பிறந்த நாளான அக்டோபர் 20 ஆம் தேதி அன்று அவர்கள் தங்களின் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது மேலும் சிறப்பு.
“பொதுவாகவே இரண்டு நாட்களுக்கு அதிகமாக நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், வீரர்கள் அனைவரும் பொறுமையாக தான் ஆட்டத்தை ஆடுவார்கள்…. ஆனால் அந்த ஆட்டத்திலும் முதல் பந்தை சிக்ஸருக்கு அடிக்க கூடிய ஒரு வீரர் விரேந்தர் சேவாக்…அவருடைய பிறந்த நாளான அக்டோபர் 20 ஆம் தேதி எங்கள் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்வதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்…எப்படி அவருடைய சிக்ஸர் ரசிகர்களை உற்சாகப்படுத்துமோ, அதேபோல் எங்களின் ‘சென்னை 28 – II’ ஆம் பாகமும் தமிழ் ரசிகர்களை ‘நட்பு’ என்னும் சிக்ஸர் வாயிலாக உற்சாகத்தின் விளிம்பிற்கே எடுத்துச் செல்லும்…”  என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.