இசையமைப்பாளர் ஜிப்ரானின் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ பயணத்தை கொடி அசைத்து துவங்கி வைத்தார் நடிகர் சூர்யா

சினிமா வரலாற்றில் புதியதொரு சாதனையை படைக்க தயாராகிவிட்டார் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான். இவர் இசையமைத்திருக்கும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் ஆறு பாடல்களை சென்னை உட்பட ஆறு நாடுகளில் சாலை வழியே பயணித்து வெளியிட இவர்கள் முடிவு செய்தது நாம் எல்லோருக்கும் தெரியும். அந்த வரலாறு படைக்கும் பயணத்தை  இன்று சென்னையில் நடிகர் சூர்யா கொடி அசைத்து ஆர்மபித்து வைத்தார். இந்த பயணத்திற்கு முன்னதாக ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் டீசரும், ஆறு பாடல்களில் முதல் பாடலான ‘வாடி வாடி’ என்ற பாடலையும் சென்னை சத்தியம் திரையரங்கில் படக்குழுவினர் விமர்சையாக வெளியிட்டனர். இந்த விழாவில்  ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் தயாரிப்பாளர் கே அனந்தன் (காமிக்புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட்), இயக்குனர் அப்பாஸ் அக்பர், இசையமைப்பாளர் ஜிப்ரான், முன்னணி கதாப்பாத்திரங்கள் கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன், ராஜேஷ் பாலச்சந்திரன், எம்சி ஜீஸ், ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து, படத்தொகுப்பாளர் கே எல் பிரவீன் மற்றும் இணை தயாரிப்பாளர் ஷபீர் ஆகியோர் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா ‘ ‘சென்னை 2 சிங்கப்பூர்’  படக்குழுவின் வரலாறு படைக்க இருக்கும் இந்த நெடுந்தூர பயணத்தை தனது வாழ்த்துகளோடு கொடி அசைத்து துவங்கி வைத்தார். இன்று துவங்கி சுமார் இருபது நாட்கள் தொடர இருக்கும் இந்த பயணத்தில் ஆறு பாடல்களை பூட்டான், மியான்மார், தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வெளியிட உள்ளனர்.
“உங்களுடைய ஆதரவு எங்களுக்கு இருந்தாலும், தற்போது உங்களுடைய பிராத்தனைகள் தான் எங்களுக்கு அதிகளவில் தேவை. இந்த தொலை தூர பயணத்தை எந்தவித தடங்கலும் இன்றி நாங்கள் கடந்து வர எங்களுக்காக கடவுளிடம் வேண்டி கொள்ளுங்கள். எங்களை ஊக்குவித்து, தங்களின் முழு ஆதரவையும் எங்களுக்கு அளித்த, எங்கள் குடும்பங்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். விரைவில் மீண்டும் சந்திப்போம்…” என்று நம்பிக்கையுடன் கூறி ‘சென்னை 2 சிங்கப்பூர்’ பயணத்தை துவங்கினார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.