‘விஸ்காசிட்டி’ நடன பள்ளியின் இரண்டாம் கிளையை நடிகை மீனா திறந்து வைத்தார்

சென்னை இளைஞர்களின் மனதை பெருமளவில் கவர்ந்த நடன கலையை கற்றுத்தர பல்வேறு நடன பள்ளிகள் சென்னையில் இயங்கி வந்தாலும், அடையாரில் உள்ள ‘விஸ்காசிட்டி’ நடன பள்ளிக்கு மட்டும் இளைஞர்கள் மத்தியில் தனி பெயர் உண்டு. தற்போது அந்த ‘விஸ்காசிட்டி’ நடன பள்ளியானது தங்களின் இரண்டாம் கிளையை சென்னை அண்ணாநகரில் கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கியது. நடிகை மீனா சிறப்பு விருந்தினராக பங்குபெற்று திறந்து வைத்த இந்த ‘விஸ்காசிட்டி’ நடன பள்ளியின் சிறப்பம்சம் – ஹிப் ஹாப், ஜாஸ் மற்றும் கான்டெம்பரரி என்னும் சமகால நடனம் ஆகும். அதுமட்டுமின்றி ‘விஸ்காசிட்டி’ நடன பள்ளியின் நிறுவனரும், நடன கலைஞருமான ஜெகதீஷ் குமார், அமெரிக்காவின் புகழ் பெற்ற ‘பிராட்வே’ நடனத்தை முறையே கற்று தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. “‘பிராட்வே’ நடனம் என்று அழைக்கப்படும் வெளிநாட்டு நடன கலையை நம் நாட்டு இளைஞர்களுக்கு கற்று தர வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள். மூன்று வயது குழந்தை முதல் நடனத்தின் மீது ஆர்வம் உள்ள அனைத்து வயதினருக்கும் இங்கு சிறந்த முறையில் நாங்கள் வெளிநாட்டு நடனங்களை கற்று தருகிறோம்” என்கிறார் ஜெகதீஷ்.

கடந்த சனிகிழமை அன்று மாலை ஏழு மணியளவில் நடைபெற்ற விஸ்காசிட்டி நடன பள்ளியின் திறப்பு விழாவை நடிகை மீனா திறந்து வைக்க, எண்ணற்ற நடன கலைஞர்களும், நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட இந்திய வாழ் வெளிநாட்டு மாணவர்களும் பங்குபெற்றது மேலும் சிறப்பு. “நான் ஒரு சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை, இந்த விஸ்காசிட்டி’ குடும்பத்தின் ஒரு நபராக தான் நான் இந்த விழாவிற்கு வந்திருக்கிறேன். அடையாரில் ஆரம்பித்த பள்ளியையும் நான் தான் திறந்து வைத்தேன், தற்போது அண்ணா நகரில் துவங்கப்பட்டுள்ள இந்த கிளையையையும் நான் திறந்து வைத்திருக்கிறேன். இதை நினைக்கும் போது எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வளர்ச்சி இதோடு நின்றுவிடாமல், தமிழகம் எங்கும் விஸ்காசிட்டி’ நடன பள்ளியின் கிளைகள் வளர வேண்டும். அதற்கு சிறந்த தூண்களாக செயல்படும் ஜெகதீஷ் மற்றும் அவருடைய பார்ட்னர் கார்த்திக்குக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.” என்று கூறினார் நடிகை மீனா.