ஹிந்தி சினிமாவில் கால் பதிக்கிறார் மிர்துளா முரளி

தென்னிந்திய சினிமா துறையை சார்ந்த புகழ் பெற்ற நடிகைகள் ஸ்ரீதேவி, அசின் மற்றும் திரிஷா ஆகியோர், ஹிந்தி பட உலகில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி மாபெரும் வெற்றி கண்டுள்ளனர். தற்போது அவர்களின் வரிசையில் இணைகிறார் கேரள மாவட்டத்தில் இருந்து உதயமான மிர்துளா முரளி. மலையாள திரை உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ‘ஆ யாள் நானல்ல’ மற்றும் ‘ஷிகாமணி’ படங்களில் நடித்த மிர்துளா, தற்போது  திக்மான்ஷு துளியா இயக்கும் ராஃக் தேஷ் படத்தில் முன்னணி கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஹிந்தி சினிமாவில் பலத்தரப்பு மக்களின் பாராட்டுகளை பெற்ற ‘பான் சிங் டோமர்’ மற்றும் ‘சாஹேப், பீவி ஆர் கேங்ஸ்டர்’ படங்களை இயக்கியது திக்மான்ஷு என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் எதார்த்தமான கதாப்பாத்திரத்தில் மிர்துளா நடிக்கும் இந்த ராஃக் தேஷ் படத்தில், பிரபல ஹிந்தி நடிகை சோனம் கப்பூரின் சகோதரர் மோஹித் மார்வா கதாநாயகனாக நடிப்பது மேலும் சிறப்பு.
 
இந்திய ராணுவ விசாரணையை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த ராஃக் தேஷ் படம் ஏற்கனவே தேசிய அளவில் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. அதுமட்டுமின்றி பிரபல நடிகர் குணல் கப்பூர் உட்பட பல பெரிய நட்சத்திரங்கள் இந்த ராஃக் தேஷ் படத்தில் நடிப்பதாக வதந்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள இந்த ராஃக் தேஷ் திரைப்படம், இந்த (ஜூன்) மாத இறுதியில் படப்பிடிப்புடன் ஆரம்பமாகிறது.
 
சமூக ஈடுப்பாடுடன் உருவாகி வரும் இந்த ‘ராஃக் தேஷ்’  திரைப்படத்தில்  மிர்துளா முரளி கதாநாயகியாக நடிப்பது, ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா துறையினருக்கும் கிடைத்த பெருமை என்பதை உறுதியாகவே சொல்லலாம்.