சிபிராஜுக்கு அதிர்ஷ்டம் தரும் ‘கட்டப்பா’!

எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை திறம்பட உள்வாங்கி நடித்து, மக்களின் உள்ளத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சிபிராஜ். இவர் நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் அனைவரிடத்திலும் பெரும் பாராட்டுகளை பெற்றது மட்டுமின்றி சிபிராஜிற்கு தனி ஒரு அடையாளத்தையும் உருவாக்கி தந்திருக்கிறது. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜாக்சன் துரை திரைப்படம், ரசிகர்கள் இடையே அதீத எதிர்பார்ப்பை பெற்று வருகிறது. மாறுப்பட்ட கதை களங்களை தேர்ந்தெடுக்கும் சிபிராஜிற்கு அவருடைய திரை வாழ்வில் முக்கியமான படமாக வளர்ந்துக் கொண்டு இருக்கிறது ‘கட்டப்பாவ காணோம் ‘. ‘கட்டப்பாவ காணோம்’ என்று தலைப்பிடப்பட்ட அடுத்த கணமே இந்த திரைப்படம் குழந்தைகள் உட்பட அனைத்து குடும்பங்களையும் கவர்ந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம், கட்டப்பா என்னும் இந்த கதாப்பாத்திரம் ஒரு மீன் என்பது தான்.

“கட்டப்பா என்னும் அந்த மீன் ஒரு அதிர்ஷ்ட மீன் எனப்படும் வகையை சேர்ந்தது. அந்த மீன் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு அதிர்ஷ்டக் காற்று அடிக்கும் என்பதால் அந்த மீனை கைப்பற்ற கடும் போட்டியே நடக்கும். அப்பேற்பட்ட ஒரு மீனுடன் நடித்ததால் என்னுள் எனக்கே பெரும் மாற்றம் தெரிகிறது ” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சிபிராஜ்.

சிபிராஜின் வாழ்க்கையில் மட்டுமின்றி, படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கையிலும் இந்த கட்டப்பா மீனானது தனது அதிர்ஷ்ட மழையை பொழிந்துள்ளது. தமிழில் மட்டுமே பாராட்டுகளை பெற்று வந்த நடிகை ஐஸ்வர்யாவை ஹிந்தி மற்றும் தெலுங்கு பட உலகில் கால் பதிக்க செய்திருக்கிறது இந்த கட்டப்பா. அது மட்டுமில்லாமல், விநியோகஸ்தர்கள் பலர் இந்த ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படத்தை வாங்க விருப்பம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது. இப்படி எல்லோர் வாழ்க்கையிலும் நல்ல காலத்தை ஏற்படுத்தி வரும் இந்த ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம், திரை வர்த்தகத்திலும் அதிர்ஷ்டமாக இருக்கும் என்றுக் கருதப் படுகிறது.