கானா உலகின் ஜாம்பவான்கள் கானா பாலாவும், மரண கானா விஜியும் ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’ படத்தில் இணைந்துள்ளனர்

“வாழும்போது வைக்காதடா சேத்து, ஏதும் அனுவிக்காம போய்டுவேடா செத்து!” – மரண கானாவின் சில வரிகள் இவை. வேறெந்த இசைவடிவத்திலும் சாத்தியமில்லாத ஒன்று கானா பாடலில் தான் அமைந்து இருக்கிறது. இசைக் கருவிகள் என்று எதுவுமில்லாமல் மேஜை, பஸ்ஸின் ஏறுமிடம், பஸ்ஸின் உச்சி, டிபன்பாக்ஸ், கரவோசை, ஷூ சத்தம் என எதுவேண்டுமானாலும் செட்டாகுமாறு  இருப்பதே கானா பாடல்களின் தனி சிறப்பு. அந்த கானா எனப்படும் உலகில் அரசர்களாக திகழும் கானா பாலா மற்றும் மரண கானா விஜி ஆகியோர், விகோசியா மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’ திரைப்படத்தில் காதல் பற்றி பாடல் எழுதி,பாடி, நடித்துள்ளனர். சுகுமாரின் இசையில்  உருவாகியுள்ள இவர்கள் இருவரின் கானா பாடல்களும் பேசப்படும் பாடல்களாக இருக்கும் என பெரிதளவில் எதிர்பார்க்கப்படுகிறது . ST குணசேகரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில். நிதின் சத்யா, ரேஷா ராஜா மற்றும் யோகிபாபு, சிங்கம் புலி, மயில்சாமி, இம்மான் அண்ணாச்சி, மனோ பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.
போகிற போக்கில் அடித்தட்டு மனிதர்களின் மன வேதனையையும் குமுறல்களையும் மட்டும் அல்ல; மனித வாழ்வையும் மாபெரும் தத்துவங்களையும் சொல்லிவிடக் கூடிய தன்மை கானா பாடல்களுக்கு உண்டு. அந்த கானா பாடல்களின் ஒரு வகையான மரண கானாவில் கைதேர்ந்தவர் மரண கானா விஜி. ‘டங்கமாரி ஊதாரி’ பாடலை பாடிய இவர் முதன்முதலாக முகம் காட்டியுள்ள படம் ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’ . படத்தில்  ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்ற பாடலை எழுதி,பாடி, நடித்துள்ளார். மக்களின் பெரும் ஆர்வத்தை தூண்டிய வண்ணம் உள்ள இந்த திரைப்படம், மே 13 ஆம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.