“பிரேமம் மலர் டீச்சருக்கு பிறகு என் கதாப்பாத்திரமும் ரசிகர்களை கவரும்” – ஜனனி

பாலாவின் அவன் இவன் படத்தில், தனது காந்த கண்களாலும் எதார்த்தமான நடிப்பாலும் தமிழ் ரசிகர்களின் மனதை வென்ற ஜனனி, தற்போது ‘உல்டா’ மற்றும் ‘தொல்லைக்காட்சி’ திரைப்படங்களில் நடித்து வருகிறார். “AR முருகதாசின் உதவியாளரான விஜய் பாலாஜி இயக்கும் படம் ‘உல்டா’. சைக்கலாஜிக்கல் திரில்லரான இந்த படத்தின் டப்பிங் முடிவடைந்துவிட்டது. அதேபோல் A R முருகதாஸ் மற்றும் லிங்குசாமியிடம் உதவியாளரான சதிக் கான் இயக்கம் படமான ‘தொல்லைக்காட்சி’யின் முதற்கட்ட படப்பிடிப்பும்  நிறைவு பெற்றுள்ளது. இந்த படத்தில் என் கதாப்பாத்திரத்தின் பெயர் ‘மலர்’. முதல் முறையாக பாரம்பரியமிக்க தமிழ் பெண் வேடத்தில் நடிக்கிறேன். பிரேமம் படத்தில் வந்த மலர் டீச்சர், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார். அது போல இந்த படத்தில் என்னுடைய ‘மலர்’ கதாப்பாத்திரமும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவரும்!” என்று சிறு புன்னகையுடன் சொல்கிறார் ஜனனி.கதைகளை தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார் ஜனனி. ” படத்திற்கு ஆலமர விழுது போல் பக்கபலமாக இருப்பது படத்தின் கதை தான். அதனால்  கதையம்சங்களை வைத்து தான் நான் படத்தை தேர்வு செய்கிறேன்” என்கிறார். மொத்தத்தில் இனி அவர் போகும் பாதை முழுக்க வெற்றி மலர்கள் இருப்பதை உணர முடிகிறது.