அலைகழிக்கப்படும் சினிமா ரசிகர்கள்.

செங்கல்பட்டு ஏரியா இன்னும் இழுபறியில் இருப்பதால் தெறி படத்தின் டிக்கெட் இன்னும் கையில் கிடைக்கவில்லை… புதுப்படத்தை ரசிகர்களோடு கண்டு மகிழ சிறந்த இடம்… காசி அல்லது குரோம் பேட் வெற்றிதான்.. ஆனால் இரண்டு தியேட்டரிலுமே தெறி திரைப்படத்தை வெளியிட சிக்கல் இப்போது வரை நீடித்து வருகின்றது….

காசி தியேட்டரில் சனிக்கிழமையில் இருந்தே டிக்கெட்டுக்காக விஜய் ரசிகர்கள் தவமாய் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. அப்படி காத்து இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை எனினும்… எந்த நிமிடத்திலும் பிரச்சனை தீர்ந்து டிக்கெட் எடுத்து விடலாம் என்ற நப்பாசை எல்லோருடைய முகங்களிலும் தெரிகின்றது..

சினிமா பார்க்க தியேட்டருக்கு வருவதே அறிதான நிலையில் இப்படி ரசிகர்களை அலைகழித்தால் அது நிச்சயம் எதிர்கால தமிழ் சினிமாவுக்கு நல்லது அல்ல..

சென்னையில் சத்தியம் அபிராமி தியேட்டர்கள் டிக்கெட் விற்பனையை முடித்து விடடன… ஆனால் தெற்கு பக்கம் இன்று வரை புக்கிங் ஆரம்பிக்கவில்லை… அதனால்தான் எல்லோரும் தெவுடு காத்துக்கொண்டு இருக்கின்றார்கள்..

இவ்வளவு அலையவிட்டு டிக்கெட் கிடைத்து… முதல் காட்சியை பார்த்து விட்டு படம் நல்லா இல்லை என்றால் காத்திருந்து பார்த்த சினிமா ரசிகனின் கோபம் என்பது சமுக வலைதளங்களில் எப்படி எதிரொலிக்கம் என்பதை நாம் கடந்தகாலங்களில்  இருந்தே பார்த்தே வருகின்றோம்..

நேற்று இரவு வரை செங்கல்பட்டு ஏரியாவில் தெறி திரைப்படத்தை திரையிட மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் பின் வாங்கி விட்டதாகவும் கேட்கும் தொகை அதிகம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன… கமல் முன்பே வலியுறுத்தும் விஷயம்.. கருப்பு  வெள்ளை என்று கேம் விளையாடாமல் எல்லாவற்றையும் வெள்ளையில்  செலவு செய்யுங்கள் என்று  எத்தனையோ முறை  சொல்லி பார்த்து விட்டார்.. ஆனால் இன்றுவரை  அதையாரும் செயல்படுத்தவில்லை.

ஒரு படத்தை தயாரித்து அது சரியான நேரத்தில் எல்லா தியேட்டர்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடவும், ஒரே நேரத்தில் முன் பதிவை ஆரம்பித்தாலே ரசிகர்களின் அலைச்சலை தவிர்க்கும்… இப்படியே நாலு படத்துக்கு அலைகழித்தால் ரசிகன் தியேட்டருக்கு வராமல் திருட்டு டிவிடியை நாடுவான் என்பதில் ஐயமில்லை.

 

பொன் முட்டை இடும் வாத்தான தமிழ் சினிமா ரசிகன் புறக்கணிக்கப்படுகின்றான்… மீண்டும் சொல்கிறேன்.. அது நல்லதில்லை.

ஜாக்கிசேகர்

13/04/2016