“அபிராமி ராமநாதனின் தயாரிப்பில் நடிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்” – சொல்கிறார் மிஷா கோஷல்

துணை வேடங்களில் நடித்திருந்தாலும் தனக்குரிய பாகத்தை சிறப்பாக நடித்து, சினிமா ரசிகர்கள் இடையே ஓர் இடத்தை பிடித்த மிஷா கோஷல் தற்போது ‘உன்னோடு கா’ படத்தில் கதாநாயகி அந்தஸ்துக்கு உயர்ந்து இருக்கிறார்.. நான் மகான் அல்ல, 7ஆம் அறிவு, முகமூடி மற்றும் ராஜா ராணி போன்ற படங்களில் துணை நடிகையாக தோன்றி, தனது கடின உழைப்பாலும், தத்ரூபமான நடிப்பாலும் மிஷா கதாநாயகியாக உருவெடுத்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. நெடுஞ்சாலை புகழ் ஆரி, பால சரவணன், மாயா உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தில் பிரபு மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. RK இயக்கி, C சத்யா இசையமைக்கும் இந்த படத்தை தமிழ் சினிமா உலகின் மூத்த தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் மற்றும் அபிராமி மெகா மால் இணைந்து தயாரித்துள்ளனர்.

“அபிராமி ராமநாதனின் தயாரிப்பில் நடிப்பது என்பது நான் செய்த பாக்கியம்.இயக்குனர் ஆர் கே புதியவராக இருந்தாலும் ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குனர் போலவே பணியாற்றுகிறார். குறுகியக் காலத்தில் திட்டமிட்டப் படியே படப்பிடிப்பை முடித்து இருப்பதே இதற்க்கு சான்று. இசை அமைப்பாளர் சத்யா அருமையாக இசை அமைத்து இருக்கிறார். வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா என் வாழ்வில் மிக முக்கியமான நாளாக அமையும். படத்தில் நான் நடிக்க மட்டும் செய்யாமல் உதவி இயக்குனராகவும் பணி ஆற்றியது மன திருப்தியை தருகிறது.

என்னோடு இணைந்து நடித்த ஆரி, மாயா மற்றும் பால சரவணன் ஆகியோர் எனக்கு சிறந்த நண்பர்களாக திகழ்ந்ததோடு மட்டுமில்லாமல் என்னை மேன்மேலும் வளர்த்து கொள்ள உதவினர். பால சரவணின் காமெடி சென்சிற்கு இணை எதுவும் இருக்க முடியாது, அவருடைய டைமிங் காமெடியால் நான் சில காட்சிகளில் வாய் விட்டு சிரித்தது எனக்கு தான் தெரியும்,” என்று புன்னகையுடன் விடை பெறுகிறார் கவர்ச்சிகரமான மிஷா கோஷல். ‘உன்னோடு கா’ திரைப்படம் நிச்சயமாக மிஷாவின் பாதையில் ஒரு திருப்பு முனையாக அமையும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.’உன்னோடு கா’ படத்தின் கதையை இயற்றி இருப்பவர் திரைத்துறை வர்த்தகத்தில் கோலோச்சும் அபிராமி ராமநாதன்ஆவார்.